“கோலி செய்ததை மறக்க மாட்டார்கள்.. 100 கோடி கேட்டு ஆர்சிபி மீது வழக்கு போடுங்க” மதன் லால் ஆவேசம்
பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றி விழாவில் நடந்த கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், முன்னாள் உலகக் கோப்பை வென்ற வீரர் மதன் லால் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். "விராட் கோலி செய்ததை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்" எனவும், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மீது வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க வேண்டும்" எனவும் அவர் கூறியிருக்கிறார்.
2025 ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஜூன் மூன்றாம் தேதி வென்றது. அதற்கு மறுநாளே பெங்களூரில் வெற்றி விழாவுக்கு அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடினார்கள். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய மதன் லால், "மக்கள் விராட் கோலி செய்ததை மறக்க மாட்டார்கள். மக்கள் வெளியே இறந்து கொண்டே இருக்கும் போது உள்ளே கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இது அதிர்ச்சி அளிப்பதாகவும், மனதை நோகடிப்பதாகவும் இருந்தது. இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கர்நாடக மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க வேண்டும்."
"இது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. 11 பேர் இறந்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கவே கூடாது; இது நடக்காமல் தடுத்திருக்கலாம். அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நீங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டீர்கள். அடுத்த நாளே பெங்களூரில் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என என்ன அவசரம்?"
"இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கொண்டாட்டத்தைத் திட்டமிட்டிருக்கலாம். அப்போதும் ஆர்சிபி ரசிகர்கள் இதில் உற்சாகத்துடன் பங்கேற்று இருப்பார்கள். நீங்கள் சரியான கால அவகாசத்தை அளித்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நடந்திருந்தாலும் ரசிகர்கள் அதைப் பார்க்க வந்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுத்திருக்கலாம்."
"இதில் யாரை நாம் குற்றம் சொல்வது? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்லது மாநில அரசா? அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால் இந்த கொண்டாட்டங்கள் நடந்திருக்காது. எனவே, அரசுக்கும் இதில் பங்கு உள்ளது. அதே சமயம், ஆர்சிபி அணிக்கும் இதில் பங்கு உள்ளது. விமானத்தில் வந்து இறங்கிய நான்கு மணி நேரத்தில் பொதுவெளியில் வீரர்களை கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்க வேண்டும் என என்ன அவசரம்?"
"ஐபிஎல் அணிகளுக்கு இன்றைய காலகட்டத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த அணியின் உரிமையாளர் அதை தவறாகக் கணித்திருக்கிறார்; மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார். பிசிசிஐ-ஐ இதில் குற்றம் சுமத்த முடியாது. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பொறுப்பு. அவர்கள்தான் மாநில அரசுடன் இணைந்து இதை செய்திருக்க வேண்டும்"
" இறந்தவர்களின் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்? அனைத்து கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் இப்போது நாசமாகிவிட்டது. மிகப்பெரிய தகவல் தொடர்பு இடைவெளி இருந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால், நமது நாட்டில் மனித உயிருக்கான மதிப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது," என்றார் மதன் லால்.


Click it and Unblock the Notifications