
தாக்கா : பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மன் ஷபீர் ரஹ்மான், சில நாள்கள் முன்பு பேஸ்புக்கில் இரண்டு ரசிகர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஷபீர் ரஹ்மான் இது போன்ற தவறான காரியங்களில் இதற்கு முன்பும் சிக்கி தண்டனைகளும், தடையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் தகாத வார்த்தைகளும், மிரட்டலும் :
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த ஜூன் 25ஆம் தேதி நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு பின், இவரின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், ஒரு பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர். அந்த பதிவை ஷபீர் ரஹ்மானுக்கு பகிர்ந்துள்ளார், அந்த ரசிகரின் நண்பர். இதனையடுத்து கோபம் கொண்ட ஷபீர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அல்லாமல், தாக்குதல் விடுப்பதாக மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், அந்த இரண்டு நபர்களையும் பேஸ்புக்கில் பிளாக் (Block) செய்துள்ளார்.
