மிர்புர் : இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தமிம் இக்பாலும், சவும்யா சர்காரும் அதிரடியாக ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

74 பந்தில் 60 ரன்கள் குவித்த தமிம் இக்பால் அஷ்வின் பந்து வீச்சில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுக்க, 56 பந்தில் 54 ரன்கள் சேர்த்த சவும்யா சர்க்கார் ரன் அவுட்டானார்.
அடுத்து வந்த லிட்டன் தாஸ் 8 ரன்களுக்கு வெளியேற, முஷ்ஃபிகுர் ரஹீம் 14 ரன்களில் பவிலியன் திரும்பினார். எனினும் நடுகள வீரர் ஷாஹிப் அல் ஹசன் நிதானமாக ஆடி 52 ரன்கள் சேர்த்து யாதவ் பந்தில் கேட்சானார்.
சபீர் ரஹ்மான் 41 ரன்களும், நாசிர் ஹுசைன் 34 ரன்களும், மஷ்ரஃபே மொர்தாசா 21 ரன்களும் தங்கள் பங்குக்கு சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்கள வீரர்களான ரபெல் ஹுசைன் 4 ரன்களும், டஸ்கின் அகமது 2 ரன்களும் சேர்த்தனர். 50 வது ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கையில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்தது.
இந்திய தரப்பில் புவனேஷ்குமார், உமேஷ்யாதவ் தலா 2 விக்கெட்டுக்களையும், தமிழக வீரர் அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும், ஷர்மா, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சற்று கடின இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் பந்துகளை வீணடித்தனர்.
100 பந்துகளில் 63 ரன்கள் மட்டும் சேர்த்த ரோஹித் ஷர்மாவும், 74 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த ஷிகர் தவானும் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
விராட் கோலி ஒரு ரன்னிலும், ரஹானே 9 ரன்னிலும் ஒற்றை இலக்கத்தோடு கடமையை முடித்துக் கொண்டனர். சுரேஷ் ரெய்னா சற்று பொறுப்புடன் ஆடி 40 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி 5 ரன்கள் மட்டும் சேர்த்து வந்த வேகத்திலேயே பவிலியனுக்கு நடையை கட்டி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 32 ரன்களும், அஷ்வின் ரன் கணக்கைத் தொடங்காமலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். மோஹித் ஷர்மா 11 ரன்களும், உமேஷ் யாதவ் 2 ரன்களும் சேர்த்து வெளியேறினர். புவனேஷ் குமார் 25 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார். 46 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களில் சுருண்டது.
வங்கதேச தரப்பில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதன் மூலம் வங்கதேச அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் இதே மிர்புரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.