பதுல்லா: என்னதான் இந்திய பேட்ஸ்மேன்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டாலும், வங்கதேச பவுலர்கள் ஒருவர் கூட ஒரு வைடோ, நோபாலோ வீசவில்லை, எக்ஸ்ட்ராவாக ஒரு ரன்னும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நடுவில் நாலு மணி நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. எனவே, 90 ஓவர்கள் வீச முடியாமல், 56 ஓவர்களிலேயே ஆட்ட நேரம் முடிவடைந்தது. இருப்பினும் இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட வங்கதேச பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. தவான் 150 ரன்களுடனும், விஜய் 89 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
வங்கதேச கேப்டன், மொத்தம் 7 பவுலர்களை பந்து வீசச் செய்து விக்ககெட் விழுமா என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரு வித்தையும் பலிக்கவில்லை. சவுமியா சர்கார், சுகவதா ஹோம், ஷாகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஜுபைல் ஹொசைன், இம்ருல் கையேஸ், முகமது ஷாகித் ஆகிய 7 பவுலர்களும், கற்ற வித்தை மொத்தத்தை இறக்கியும் பயனில்லை.
ஆனால், 56 ஓவர்கள் வீசியும், இந்திய வீரர்களிடம் நன்கு அடிபட்டும் கூட ஒரு பவுலரும் ஒரு வைடோ, நோபாலோ கூட போடவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். அதுமட்டுமல்ல, லெக் பைஸ், பைஸ் போன்றவகைகளிலும் கூட ரன் வரவில்லை. ஆக மொத்தம், 239 ரன்களையும், இந்திய பேட்ஸ்மேன்கள் இருவரும் வியர்வை சிந்திதான் சம்பாதித்துள்ளனர்.