உலகக்கோப்பை.. என்னடா இது கேப்டன்களுக்கு வந்த சோதனை.. வில்லியம்சனை தொடர்ந்து ஷகிப் அல் ஹசனும் காயம்!
மும்பை: உலகக்கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் அடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி 8வது இடத்தில் நிறைவு செய்திருந்தாலும், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என்று நட்சத்திர அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்தது. அதேபோல் ஷகிப் அல் ஹசன் மிகச்சிறந்த ஆட்டத்தை அந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தினார்.

606 ரன்கள் குவித்ததுடன் சுமார் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணி மிகச்சிறந்த அணியாக உருவெடுக்கும் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட்டில் புயல் வீசி வருகிறது என்றே சொல்லலாம். வங்கதேச அணியின் சீனியர் வீரர்களான தமீம் இக்பால் - ஷகிப் அல் ஹசன் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் வங்கதேச அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பை அணியில் தமீம் இக்பால் தேர்வு செய்யப்படவில்லை. இந்த சிக்கல் வங்கதேச அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயத்தில் சிக்கியுள்ளார். உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வந்த வங்கதேச வீரர்கள், பயிற்சி போட்டிகளுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கால்பந்து விளையாடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஷகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிற்சிப் போட்டியில் ஷகிப் அல் ஹசன் கேப்டனாக விளையாடாமல் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கி இருக்கிறார். இவர் இரு பயிற்சி போட்டிகளிலும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications