அரசியலில் களமிறங்கும் வங்கதேச கேப்டன்.. புது ரூட்டில் செல்லும் ஆல்ரவுண்டர்.. விரைவில் ஓய்வு?
டாக்கா: வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விரைவில் அந்நாட்டில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி என்று மொத்தமாக 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நிறைவு செய்தது. வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் - தமீம் இக்பால் இடையிலான மோதல் அந்த அணி வீரர்களை பாதித்தது. இதனிடையே ஷகிப் அல் ஹசனும் காயத்தில் சிக்க, வங்கதேச அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 5 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்தார். 2006ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வரும் ஷகிப் அல் ஹசன், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும், ஷகிப் அல் ஹசனை நம்பியே அந்த அணி இருந்து வந்தது.
இந்த நிலையில் 36 வயதாகும் ஷகிப் அல் ஹசன், வங்கதேச நாட்டில் விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தில் ஆளும் நவமி லீக் கட்சியில் வேட்பாளராக ஷகிப் அல் ஹசன் போட்டியிட வாய்ப்புள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஷகிப் அல் ஹசன் ஏற்கனவே பெற்றுவிட்டார் என்று அந்த கட்சி நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஷகிப் அல் ஹசன் சொந்த ஊரான மகுரா தொகுதி அல்லது டாக்கா தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் சில மாதங்களில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வங்கதேச அணியின் கேப்டனாக இருந்த மோர்டசா கடந்த 2018ஆம் அரசியல் களமிறங்கினார். அதன்பின் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய அவர், பின்னர் ஓய்வை அறிவித்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மோர்டசாவை தொடர்ந்து மற்றொரு வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனும் அரசியலில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications