டாக்கா: வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதற்கு முதல் லீக் போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வியடைந்ததே மிக முக்கியக் காரணம். அன்றைய நாட்களில் கத்துக் குட்டியாக பார்க்கப்பட்ட வங்கதேச அணி, இந்தியாவை வீழ்த்தி தான் முதல் வளர்ச்சியை அடைந்தது. அந்த வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் தமீம் இக்பால்.

தமீம் இக்பால் அடித்த அரைசதம் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2007ல் தொடங்கிய தமீம் இக்பாலின் கிரிக்கெட் பயணம், 16 ஆண்டுகளாக சிறப்பாக அமைந்தது. படிப்படியாக உயர்ந்து வங்கதேச கிரிக்கெட்டை ஒரு கேப்டனாக தோளில் சுமந்து வந்தார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை ஆடியவர்.
70 டெஸ்ட் போட்டிகள், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் 87 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 8,313 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5134 ரன்களும் விளாசி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளில் 25 சதங்களை விளாசியவர். இதனால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் இவரை பின்பற்ற தொடங்கினார்.
இந்த நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த தமீம் இக்பால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துக் கொள்கிறேன். இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. எனது தந்தை கனவை நிறைவேற்றவே கிரிக்கெட்டை விளையாடினேன். ஓய்வு குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் கடைசி வரை முயற்சித்தேன். எனது முயற்சி போதுமானதா என்பது தெரியவில்லை. ஆனால் களத்தில் 100% முயற்சி செய்தேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள சூழலில் திடீரென வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் குழம்பியுள்ளனர்.