மிர்புர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி வங்க தேசம் வரலாற்று சாதனை படைத்து சர்வதேச கிரிக்கெட் அணிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நேற்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி, வங்கதேசத்திற்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 40 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக அம்லாவும், டி காக்கும் களமிறங்கினார்கள். ஆனால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளினர்.
அதன் பிறகு களமிறங்கிய டூ பிளசிஸ் மற்றும் ரோசோ ஆகிய இருவரும் விரைவாக அவுட் ஆனதால் 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அதன்பின்னர் டுமினியும் (51) அணியை சரிவிலிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு பெரிய பலன் கிடைக்கவில்லை. 40 ஒவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 168 எடுத்தது. வங்கதேச தரப்பில் ஷாகிப் அல் ஹசன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
டக்வொர்த் விதிப்படி 40 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கி விளையாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சவும்யா சர்காரும், தமிம் இக்பாலும் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். அவர்களை தென்ஆப்பிரிக்க பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினர். சவும்யா சர்கார் 75 பந்துகளில் 90 ரன்களில் கேட்ச் ஆனார். வங்கதேச அணி 26.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 170 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 61 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி ஒரு நாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 3 முறை தொடரை வங்கதேசம் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.