
பதினாறு வருட வெற்றி
16 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானை 2வது முறையாக வங்கதேசம் ஒருநாள் போட்டியொன்றில் வீழ்த்தி சாதனை படைத்தது. ஆனால், என்ன ஆச்சரியம்..நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும், வங்கதேசம், வென்று, தொடரையும் கைப்பற்றி சாதித்துவிட்டது.

எளிதாக வீழ்த்திய வங்கதேசம்
டாக்காவில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாவதாக பேட் செய்த வங்கதேசம், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 38.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 240 ரன்களை எட்டி பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசியது.

அடுத்தடுத்து சதம்
முதல் போட்டியில் 132 ரன்கள் அடித்த வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால், நேற்றைய போட்டியிலும், 116 ரன்கள் அடித்தார். அடுத்தடுத்த இரு செஞ்சுரிகள், பாகிஸ்தானை கவிழ்க்க வங்கதேசத்துக்கு அரண்போல உதவின. இந்த வெற்றிகளின் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேசம் கைப்பற்றி அசத்தியுள்ளது.

உலக கோப்பையிலும் சூப்பர்
நடந்து முடிந்த உலக கோப்பையிலும், வங்கதேச ஆட்டம் மெச்சும் படியாக இருந்தது. காலிறுதிக்கு தகுதி பெற்றும் அசத்தியது. இந்தியாவிடம் தோற்று அந்த அணி வெளியேறியிருந்தது. இந்தியாவுக்கு ஆதரவாக அம்பயர்கள் நடந்து கொண்டதாக வங்கதேச கேப்டன் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











