மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026-ல் வங்கதேசம் பங்கேற்பது குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று ஐசிசி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜனவரி 7 அன்று BCB வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்னும் ஒரு தீர்வுக்காகப் பணியாற்றி வருவதாகவும், இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.பிப்ரவரி 7 முதல் மார்ச் 8, 2026 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்களில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் அணி, மேற்கிந்தியத் தீவுகள், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் ஆகியவற்றுடன் தனது குரூப் சி போட்டிகளை இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்கும் என ஐசிசி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்த வதந்திகளை BCB முற்றிலும் பொய்யென திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் போட்டிகளை இடம் மாற்றும் கோரிக்கை குறித்து ஐசிசி பதில் அனுப்பியுள்ளது. ஐசிசி அனுப்பிய தகவலில், "பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எழுப்பியுள்ள கவலைகளை நிவர்த்தி செய்ய பிசிபியுடன் நெருக்கமாக வேலை செய்ய ஐசிசி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஐசிசி, வங்கதேசத்துடன் துணை நின்று, நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்துள்ளது.
ஊடகங்களில் தங்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ஐசிசியிடம் தெரிவித்து இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால், அட்டவணையை மாற்றுவது பெரும் சவாலாக மாறிவிடும். இதனால், வங்கதேசத்தை நீக்கிவிட்டு வேறு ஒரு நாடை தொடருக்குள் கொண்டு வரலாமா என்று யோசனையிலும் ஐசிசி இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், மத்திய அரசு பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தால், வங்கதேச அணி இந்தியாவுக்கு வரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.