“மனம் திருந்தி விட்டோம்.. எங்க கூட மேட்ச் ஆடுங்க”.. வழிக்கு வந்த வங்கதேசம்.. பிசிசிஐ-க்கு கடிதம்
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிசிஐ) ஏற்பட்டுள்ள கசப்பான உறவைச் சரிசெய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தற்போது தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்குச் சென்று விளையாட மறுத்த வங்கதேசத்தின் முடிவால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ அனுமதி அளிக்காததை அடுத்து, பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்குத் தனது அணியை அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்தது. மேலும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றவும் கோரிக்கை விடுத்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த கோரிக்கையை நிராகரித்ததுடன், இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதுமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இடைக்கால அரசாங்கத்தை சமாதானப்படுத்தி இந்தியாவிற்கு அணியை அனுப்ப அவர் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்றும், இடைக்கால வாரியம் அமைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் ஆசியக் கோப்பை மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியின் வங்கதேசச் சுற்றுப்பயணம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்த பிசிசிஐ-யின் ஆதரவு வங்கதேசத்திற்கு அவசியமாகிறது. குறிப்பாக, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மூலம் கிடைக்கும் ஒளிபரப்பு உரிமம் உள்ளிட்ட வருவாய் அந்த வாரியத்தின் நிதி நிலையைச் சீராக்க உதவும். எனவே, உறவைச் சீர்செய்யக் கோரி பிசிசிஐ-க்கு வங்கதேச வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தமீம் இக்பால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்தியாவுடன் மோதுவதை விட, இணக்கமாகச் செயல்படுவதே சிறந்தது என தமீம் இக்பால் கூறி வந்தார். அவரது நியமனம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான உறவை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விசாரணை அறிக்கை ஏப்ரல் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications