வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) நிதிக்குழுத் தலைவர் எம். நஸ்முல் இஸ்லாம், வங்கதேச கிரிக்கெட் ஜாம்பவான் தமீம் இக்பாலை 'இந்தியாவின் கைக்கூலி என குற்றம் சாட்டினார். இந்தியா - வங்கதேச கிரிக்கெட் உறவுகள் குறித்து தமீம் தெரிவித்த கருத்து, அந்நாட்டில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
சர்வதேச அளவில் வங்கதேசத்தின் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரரான தமீம் இக்பால், பெரும்பாலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்றார். தேசிய அரசாங்க நிலைப்பாட்டைக் கடந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க BCB-ஐ அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விலகியதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) காரணமாக இருந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து BCB தற்போது பரிசீலித்து வருகிறது.
சமூக ஊடகங்களில் தமீம் குறித்து கருத்து தெரிவித்த நஸ்முல் இஸ்லாம், "இந்த முறை, வங்கதேச மக்கள் தங்கள் சொந்தக் கண்களால் இன்னொரு நிரூபிக்கப்பட்ட இந்திய கைக்கூலியாக சாட்சியம் அளித்தனர்" என்றார். இக்கருத்து வங்கதேச கிரிக்கெட் சமூகத்தில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கம் (CWAB) இந்தக் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. "BCB இயக்குநர் எம். நஸ்முல் இஸ்லாம், முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் குறித்து கருத்தால் நாங்கள் திகைப்பும், அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம். 16 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய வங்கதேசத்தின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் குறித்து வாரிய அதிகாரி ஒருவர் இப்படிப் பேசுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது தமீமைப் போன்ற வீரர் மட்டுமல்லாது, எந்த கிரிக்கெட் வீரரையும் பற்றிய இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையும, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அவமானகரமானவையும ஆகும்."
"இந்தக் கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு பொறுப்புள்ள வாரிய இயக்குநர் பொதுவெளியில் இத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்கும்போது, அது வாரிய அதிகாரிகளின் நடத்தை விதிகளின் மீதும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது," என CWAB வன்மையாகக் கண்டனம் தெரிவித்தது.
"சம்பந்தப்பட்ட இயக்குநர் பகிரங்க மன்னிப்பு கேட்டு, பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி, BCB தலைவருக்கு ஏற்கனவே ஒரு எதிர்ப்புக் கடிதத்தை (Protest Letter) சமர்ப்பித்துள்ளோம். BCB தலைவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்," என்று CWAB தனது அறிக்கையில் கூறியது.