மும்பை : இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட அனைத்து போட்டிகளிலும் வங்கதேசம் படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சண்டிகா ஹ்த்ருசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் இந்த நடவடிக்கை இந்திய தொடரில் தோல்வி அடைந்ததால் எடுக்கப்பட்டது அல்ல என்பது தான் ஹைலைட். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது வங்கதேச அணி நியூசிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லீக் போட்டி ஒன்றில் விளையாடியது.

அப்போது இடைவேலையின் போது தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும் வீரர் சோம்பேறித்தனமாக இருந்ததாக கூறி வங்கதேச பயிற்சியாளர் ஹத்துரசிங்கே, அவரை கன்னத்தில் அறைந்து இருக்கிறார். வங்கதேச பயிற்சியாளரின் இந்த நடவடிக்கை அணியில் உள்ள வீரர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
ஆனால் இது குறித்து ஊடகங்களில் தெரிவிக்காமல் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று ஒப்பந்தத்தை மீறி ஹத்ரசிங்கே மூன்று மாதத்திற்கு மேல் விடுமுறை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்திய தொடருக்கு பிறகு ஹத்ருசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் பாரூக் அஹமத், ஹத்தருசிங்கே மீது இரண்டு புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உலகக்கோப்பை தொடரின் போது அவர் வீரரை அறைந்து இருக்கிறார்.இதை எங்களால் கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியாது. வீரர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். அதை அவர் தரவில்லை.
இது குறித்து விசாரணை நடத்த நாங்கள் உத்தரவிட்டு இருக்கிறோம். இதேபோன்று ஒப்பந்தத்தின் படி ஹத்ரசிங்கே ஆண்டுக்கு 45 நாட்கள் தான் விடுமுறை எடுக்க வேண்டும். ஆனால் 2023 ஆம் ஆண்டு 112 நாட்களும் 2024 ஆம் ஆண்டு 59 நாட்களும் அவர் விடுமுறை எடுத்திருக்கிறார். இதனால் அவர் அதிரடியாக நீக்கி இருக்கிறோம் என்று ஃபரூக் அகமத் கூறியுள்ளார். இந்த சூழலில் வரும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பில் சிம்மன்ஸ் தற்காலிக பயிற்சியாளராக நியமித்திருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.