அப்பப்பா..! இப்ப நினைச்சாலும்.. உயிர் பொழச்சு வந்ததே பெரிசு.. சொந்த ஊர் வந்த வங்கதேச வீரர்கள்
டாக்கா: கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
நியூசிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதியில் வழிபாட்டுக்காக சென்றனர்.

உயிர் தப்பினர்
மயிரிழையில் அவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிர்தப்பினர். அவர்கள் பத்திரமாக தங்கியிருந்த ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டெஸ்ட் போட்டி ரத்து
இந்த சம்பவத்தால், நியூசிலாந்து, வங்கதேச அணி பங்கேற்கயிருந்த கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் ஒப்புதல் அளித்தது.

டாக்கா வந்தனர்
இந்நிலையில் வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள், டாக்கா வந்தடைந்தனர். இதுகுறித்து மகமதுல்லா கூறியதாவது:ஒரே ஒரு விஷயத்தை தான் இங்கு எங்களால் குறிப்பிட்டு சொல்ல முடியும்.

உயிரோடு திரும்பினோம்
உண்மையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களின் வேண்டுதல் காரணமாக தான் நாங்கள் இன்று உயிரோடு நாடு திரும்பியுள்ளோம். எங்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.

கடுமையான பாதிப்பு
வங்கதேச முன்னணி வீரர் தமிம் இக்பால் கூறுகையில், மனதளவில் வீரர்களாகிய நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அந்த நிலையில் இருந்து எப்போது மீண்டு வருவோம் என்று கூற முடியாது.

குடும்பத்தினர் கவலை
தற்போது நாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளோம். எங்களின் குடும்பத்தினர் எங்களுக்காக கவலையுடன் காத்திருக்கின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications