தாகா: வங்கதேச அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் பதற்றம் தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது. எனினும் பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் தான் மே 25 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் வங்கதேச அணி விளையாட இருக்கிறது. மே 21 அன்று பாகிஸ்தானுக்குச் செல்லும் வகையில் வங்கதேச அணியின் அட்டவணை அமைந்துள்ளது. ஆனால் தற்போது உள்ள நிலையில் வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, 2010 முதல் 2017 வரை எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பாகிஸ்தானில் மற்ற நாட்டு அணிகள் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. தற்போது நடந்த இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் சம்பவங்களால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இக்கட்டான நிலைக்குச் சென்றிருக்கிறது.
தற்போது பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) என்ற டி20 தொடர் நடைபெற வேண்டும். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்களால் அந்தத் தொடர் துபாய்க்கு மாற்றப்பட்டது. ஆனால், துபாயில் தொடரை நடத்த அனுமதி கிடைக்காததால் அந்தத் தொடர் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, அடுத்து வங்கதேசத்துடன் பாகிஸ்தான் அணி விளையாட வேண்டிய நிலையில் உள்ளது. பாகிஸ்தானுக்குச் செல்லும் முன் வங்கதேச அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகள் மே 17 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் இந்தத் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வங்கதேச தொடரை மாற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்த எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் வங்கதேச அணிக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவும் அனுமதி கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இது இந்த நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளது.
இது பற்றி வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) கூறுகையில், தாங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது குறித்து இறுதி முடிவை அறிவிக்க மேலும் சில நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது.