டாக்கா: இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி வங்கதேசம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் அந்த அணி தொடரிலிருந்தே நீக்கப்பட்டது. ஆனால், தற்போது அதே இந்தியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கத் தங்கள் நாட்டு வீரர்களுக்கு வங்கதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. சில நாட்களிலேயே வங்கதேசம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன. கடந்த வாரம் தான், இந்தியாவில் பாதுகாப்பு சரியில்லை என்று கூறி கிரிக்கெட் அணியை அனுப்ப வங்கதேச அரசு மறுத்தது. ஆனால், புதன்கிழமையன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கத் தங்கள் நாட்டு வீரர்களுக்கு அந்த அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனையடுத்து, ஒரு வீரர் மற்றும் பயிற்சியாளர் அடங்கிய குழு வரும் ஜனவரி 31ஆம் தேதி டெல்லி வரவுள்ளது.

கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி, துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு நீதியா என்ற கேள்விக்கு வங்கதேச அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அந்நாட்டின் விளையாட்டுத் துறை செயலாளர் கூறுகையில், "துப்பாக்கி சுடுதல் போட்டி உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். போட்டி நடைபெறும் இடம் முழுப் பாதுகாப்புடன் இருப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, அது பெரிய மைதானங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் என்பதால் அங்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம். மேலும், விளையாட்டு மூலம் நட்புறவை வளர்க்கவே இந்த அனுமதியை வழங்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய இந்தியத் தேசிய ரைபிள் சங்கத்தின் செயலாளர் பவன் சிங், "எங்கள் தரப்பில் எந்தச் சிக்கலும் இல்லை. துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கள் உபகரணங்களுடன் வருவதால், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் போலவே வங்கதேசமும் இதில் பங்கேற்கிறது" என்று கூறினார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்கக் கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பையைப் புறக்கணித்தது. ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பலமுறை உத்தரவாதம் அளித்தும் அதை வங்கதேசம் ஏற்கவில்லை. ஆனால், தற்போது துப்பாக்கி சுடும் வீரர்களை மட்டும் இந்தியாவுக்கு அனுப்புவது அந்நாட்டின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரே ஒரு வீரரை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கியதற்காக பழி வாங்கும் நோக்கத்திலேயே வங்கதேச அரசு 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வர முடியாது என வீம்பு பிடித்தது. அதன் முடிவாக தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறது.
கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை தாண்டி அரசியல் களமாக பயன்படுத்தப்பட்டு வருவது புதிதல்ல. ஆனால், சமீப காலமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் இடையே அந்த விளையாட்டு முழு அரசியல் களமாக மாற்றப்பட்டு விட்டது. இது விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க விரும்பும் பலருக்கு ஏமாற்றமாக மாறி உள்ளது.