டாக்கா: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், இந்த முடிவால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச அணி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, இந்தியா வர மறுத்தால், அவர்களுக்கு சுமார் 240 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது வங்கதேச பண மதிப்பில் இது சுமார் 325 கோடி ஆகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மூலம் ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் வருவாய் பங்கிீட்டில் வங்கதேசத்திற்கு கிடைக்க வேண்டிய தொகை நிறுத்தப்படலாம். இது அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தையே முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

ஐசிசி வருவாய் மட்டுமின்றி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் சுமார் 60 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களை புறக்கணிக்கும் போது, பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய முன்வர மாட்டார்கள். இது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பட்ஜெட்டில் பெரிய ஓட்டையை உருவாக்கும்.
வங்கதேசத்தின் இந்தச் செயலால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி வங்கதேசம் சென்று விளையாடத் திட்டமிட்டுள்ள இருதரப்புத் தொடரும் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக இந்திய அணி ஒரு நாட்டுக்குச் சென்று விளையாடினாலே, அந்த நாட்டு வாரியத்திற்கு தொலைக்காட்சி உரிமம் மூலம் பல கோடிகள் வருமானம் கொட்டும். மற்ற அணிகளுடன் 10 போட்டிகள் விளையாடி கிடைக்கும் வருமானம், இந்தியாவுடன் விளையாடும் ஒரு தொடரிலேயே கிடைத்துவிடும். தற்போது அதுவும் கைநழுவிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கதேச அரசின் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இந்தியா வரக்கூடாது என்பதில் மிகவும் கறாராக உள்ளார். முன்னாள் கேப்டன் புல்புல் அவரைச் சந்தித்துப் பேசியும் எந்தப் பலனும் இல்லை. மூத்த வீரர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்கவில்லை. ஏற்கனவே தமிம் இக்பால் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கே உரிய மரியாதை கிடைக்காத சூழலில், தாங்கள் எதிர்த்துப் பேசினால் பிரச்சனை பெரிதாகும் என வீரர்கள் அச்சப்படுவதாகக் கூறப்படுகிறது.
உலகக்கோப்பையில் விளையாடாவிட்டாலும், வீரர்களுக்குக் கிடைக்க வேண்டிய போட்டி ஊதியத்தை அரசே வழங்கிவிடும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சர்வதேச அளவில் விளையாடும் வீரர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள் அல்ல. உலக அரங்கில் தங்கள் திறமையை நிரூபிப்பதே முக்கியம். எனவே, அரசின் இந்த முடிவு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.
அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படும் இந்த முடிவு, வங்கதேச கிரிக்கெட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.