
முதல் இன்னிங்ஸ்
தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20, விராட் கோலி 1 என அடுத்தடுத்து ஏமாற்ற, புஜாரா - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி மட்டும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். எனினும் அவர்களால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை புஜாரா ஒருபுறம் 90 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களும் அடித்து வெளியேறினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்களை குவித்தது.

வலுவான நிலை
இதனையடுத்து இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டம் முழுக்க முழுக்க இந்தியாவின் பக்கம் சாய்ந்தது. லோயர் ஆர்டரில் ரவிச்சந்திரன் அஸ்வின் - குல்தீப் யாதவ் ஆகியோர் அமைத்த 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் இந்தியாவின் ஸ்கோர் 380 ரன்களுக்கும் மேல் சென்றது. அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் அடித்தனர். பின்னர் வந்த டெயில் எண்டர்ஸ் சற்று ரன் சேர்க்க இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

வங்கதேச இன்னிங்ஸ்
வலுவான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய வங்கதேச படைக்கும் முதல் பந்திலேயே ஆப்பு வைத்தார் முகமது சிராஜ். அவர் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே நஜ்முல் ஹொசைன் சாண்டோ கோல்டன் டக் அவுட்டானார். மற்றொரு ஓப்பனர் ஜாகீர் ஹாசனும் 20 ரன்களுக்கு நடையை கட்டினார். வேகப்பந்துவீச்சு தான் கடினமாக உள்ளது என்று பார்த்தால் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி வங்கதேசம் சுருண்டது.

குல்தீப்பின் பவுலிங்
பேட்டிங்கில் கலக்கிய குல்தீப் யாதவ், பவுலிங்கில் அடுத்தடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அதிகபட்சம் என்று பார்த்தால் லிண்டன் தாஸ் 24 ரன்களும், முஸ்ஃபிகுர் ரஹிம் 28 ரன்களையுமே அடித்தனர். இதனால் 102 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்களை பறிகொடுத்தது. கடைசி நேர நம்பிக்கையாக மெஹிடி ஹாசனும், எபாடாட் ஹொசைனும் சேர்ந்து நிதான பார்ட்னர்ஷிப்பை அமைத்து வருகின்றனர். 2வது நாளின் முடிவில் வங்கதேச அணி 133 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. அவர்களை விட இந்தியா 271 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications











