சென்னை: மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.
50 ஓவர்கள் ஆடப்படும், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984ம் ஆண்டு முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா, இலங்கை தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆசிய கோப்பை போட்டியை 50 ஓவர் மற்றும், 20 ஓவர் போட்டிகளாக மாற்றி, மாற்றி நடத்துவது என்று சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் சிங்கப்பூரில் ஆலோசனை நடத்தினர்.
இதில், 2016ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை வங்காளதேசத்தில் நடத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் பரிந்துரையை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இந்த ஆசிய போட்டி முதல் முறையாக டி20 போட்டியாக நடத்தப்படுகிறது.
பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதிவரை நடைபெறும் இந்த போட்டியில் 5 நாடுகள் கலந்து கொள்கின்றன. டெஸ்ட் ஆடும் அந்தஸ்து கொண்ட அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் நேரடியாக இந்த போட்டியில் பங்கேற்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடக்கும் ஆப்கானிஸ்தான், ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி 5வது அணியாக ஆசிய போட்டியில் பங்கேற்கும்.