மிர்பூர்: இந்தியாவை வீழ்த்திய வங்கதேச அணியை அந்த நாட்டு ஊடகங்கள் ஆஹா ஓஹோவென பாராட்டி எழுதி வருகின்றன.
வங்கப் புலிகள் காட்டுக்குள் நுழைந்து விட்டனர். இனி வேட்டை தொடரும் என்று அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மிர்பூரில் நேற்று நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை, வங்கதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்திய அணியின் கவனக்குறைவு, முன்னணி வீரர்கள் கைவிட்டது, சொதப்பலான பவுலிங் என பலவும் சேர்ந்து வங்கதேச அணிக்கு சாதகமாகப் போய் விட்டது. இந்தியாவைக் கைவிட்டு விட்டது.
பேட்டிங்கில் முதலில் பட்டையைக் கிளப்பிய வங்கதேசம் பின்னர் பந்து வீச்சில் பிரமாதப்படுத்தியது. குறிப்பாக இளம் அறிமுக வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
இந்த வெற்றியை வங்கதேச செய்தித்தாள்கள் வாயாரப் புகழ்ந்து வருகின்றன. வங்கதேச அணியை டைகர்ஸ் என்று செல்லமாக அழைப்பார்கள். அதைக் குறிப்பிடும் வகையில், வெல்கம் டூ ஜங்கிள்.. அதாவது வனம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று தலைப்பிட்டு செய்தி போட்டுள்ளனர்.
அதேபோல ரஹ்மானுக்கும் பல முனைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
டாக்கா டிரிப்யூன் எழுதியுள்ள செய்தியில், பழிக்குப் பழியை மிகச் சரியான முறையில் செலுத்தி விட்டார்கள். ரஹ்மானுக்கு நன்றி. புலிகள் மிக் சிறப்பான பழிக்குப் பழியை கொடுத்து விட்டனர் என்று எழுதியுள்ளது.
மேலும் அந்த செய்தியில், 2015 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்குப் பின்னர் (அப்போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது) முதல் முறையாக இந்தியாவை வங்கதேசம் சந்தித்துள்ளது. அப்போட்டியில் சிறப்பான வெற்றி கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. உற்சாகப்படுத்தியுள்ளது என்று எழுதியுள்ளனர்.
இன்னொரு செய்தித் தாளில், புலிகள் உண்மையிலேயே மிகப் பயங்கரமானவர்களாக உள்ளனர் என்று பாராட்டியுள்ளனர்.
இதேபோல நியூ நேஷன், டெய்லி சன் என பல பத்திரிகைகளும் இந்தியாவை வீழ்த்தியதைப் பற்றி பயங்கரமாக பாராட்டி எழுதித் தீர்த்துள்ளனர்.
சரி சரி ரொம்ப ஆடாதீங்கப்பா... இந்தியாவுக்கு வந்தா எங்காளுக "புளி"யைக் கரைச்சு குழம்பு வச்சிருவாங்க..!