2வது போட்டி
நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஸ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
இலங்கை பேட்டிங்
இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஸ்பிகுர் ரஹீம் இலங்கை பேட்ஸ்மேன் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிடி ஹாசன் வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த குணதிலகா ஒரு பந்தை மெஹிடி ஹாசனிடம் மெதுவாக தட்டிவிட்டார். அப்போது மறுமுணையில் நின்றிருந்த பதும் நிஷங்கா சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். ஆனால் பின்னர் பவுலர் அந்த பந்தை தடுத்ததை அறிந்து நின்றுவிட்டார்.
ஆக்ரோஷம்
இந்த சம்பவத்தின் போது கீப்பிங் செய்துகொண்டிருந்த முஸ்பிகுர் ரஹிம், பவுலர் மெஹிடியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. இந்நிலையில் ரசிகர்கள் இது குறித்த வீடியோவை தற்போது இணையத்தில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நடவடிக்கை இருக்குமா?
பொதுவாக பேட்ஸ்மேனோ, பவுலரோ ரன் எடுக்கும்போது சகவீரரை கீழே வேண்டுமென்றே தள்ளிவிட்டால், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் மெஹிடி ஹாசனை, சண்டைக்கு தூண்டிவிடுவதுபோல் முஸ்பிகுர் ரஹிம் பேசியிருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை பாயும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.