லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் பிஎஸ்எல் தொடர் வரும் மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச வீரர்கள் இந்தத் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்விக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிஎஸ்எல் 2026 தொடரில் விளையாட வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், ஷோரிபுல் இஸ்லாம், நஹித் ராணா, தன்சித் ஹசன் தமிம் மற்றும் ரிஷாத் ஹொசைன் ஆகிய 6 வீரர்களுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது. இருப்பினும், பாகிஸ்தானில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் காரணமாக, அந்நாட்டு அரசு தனது வீரர்களை அனுப்பத் தயக்கம் காட்டி வருகிறது.

இது குறித்து வங்கதேச விளையாட்டுத் துறை அமைச்சர் அமினுல் ஹக் கூறுகையில், "எங்கள் வீரர்களின் பாதுகாப்பில் சிறு சந்தேகம் இருந்தாலும் அவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம். இது குறித்து முதலில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பிறகு தேசிய பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனையைப் பெற்று அரசு இறுதி முடிவெடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பிஎஸ்எல் போட்டிகள் வெறும் 2 மைதானங்களில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஆரம்பகட்ட போட்டிகளுக்குப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் பாகிஸ்தான் வாரியம் அறிவித்திருந்தது. இது மற்ற நாட்டு வீரர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கை மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் ஐபிஎல் ஒப்பந்தங்களைக் காரணம் காட்டி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிவிட்டனர்.
இந்த விவகாரத்தில் ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, 2026 டி20 உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர வங்கதேசம் மறுப்பு தெரிவித்தது. இதனால் அந்த அணி உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது. அப்போது வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பேசிய மோஷின் நக்வி, இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானும் விளையாடாது என மிரட்டல் விடுத்தார்.
ஆனால், இப்போது அதே வங்கதேசம் பாதுகாப்பு காரணங்களைக் கூறி பாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பத் தயங்குவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கதேச அணிக்காகவா பாகிஸ்தான், ஐசிசி மற்றும் பிசிசிஐ-யுடன் மல்லுக்கட்டியது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வங்கதேச அரசின் இந்த முடிவால் முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற நட்சத்திர வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை அவர்கள் விலகினால், அது பிஎஸ்எல் தொடரின் தரத்தைப் பெருமளவு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
