டாக்கா: வங்கதேச பிரீமியர் லீக் (BPL) தொடரில் கடந்த 24 மணி நேரமாக நிலவி வந்த இக்கட்டான சூழல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் எம். நஸ்முல் இஸ்லாம் மீது வாரியம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, வீரர்கள் தங்களது புறக்கணிப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
அதே சமயம், தங்களை அவமானப்படுத்திய இயக்குநர் நஸ்முல் இஸ்லாம் "பகிரங்க மன்னிப்பு" கேட்க வேண்டும் என்ற கோரிக்கையில் வீரர்கள் இன்னும் உறுதியாக உள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தினரும் (CWAB), கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் நேற்றிரவு நடத்திய அவசர பேச்சுவார்த்தையில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த இயக்குநர் நஸ்முல் இஸ்லாமை, வாரியத்தின் முக்கியமான நிதிக் குழுவிலிருந்து உடனடியாக நீக்குவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை முதல் BPL போட்டிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நஸ்முல் இஸ்லாம் பேசிய சில வார்த்தைகள் தான் இந்த பெரும் போராட்டத்துக்கு காரணம். "2026 டி20 உலகக்கோப்பைக்காக இந்தியாவிற்குச் செல்லாவிட்டால் வாரியத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை; வீரர்களுக்குத் தான் சம்பளம் கிடைக்காது. நஷ்டம் அவர்களுக்குத்தான்" என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
மேலும், "வீரர்களுக்காகப் பல கோடிகளைச் செலவு செய்கிறோம், ஆனால் அவர்கள் சரியாக ஆடுவதில்லை. இதுவரை செலவு செய்த பணத்தை அவர்களிடமிருந்து திரும்பக் கேட்க வேண்டும்" என்று வீரர்களின் திறமையைக் கொச்சைப்படுத்தினார். ஏற்கனவே மூத்த வீரர் தமிம் இக்பாலை "இந்திய உளவாளி" என்று விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் சங்கத் தலைவர் முகமது மிதுன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "கிரிக்கெட்டின் நலன் கருதியே நாங்கள் விளையாடச் சம்மதித்துள்ளோம். வாரியம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளது. நஸ்முல் இஸ்லாம் நிதிக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் வீரர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறினார்.
இது குறித்துப் பேசிய வாரிய இயக்குநர் இப்திகார் ரஹ்மான், "வாரியத்தின் சட்டவிதிப்படி நஸ்முல் இஸ்லாமுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் அவர் பதிலளிக்க வேண்டும். அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. அவர் பதிலளித்ததும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்" என்று கூறினார்.
நிதிக் குழுவிலிருந்து நீக்கப்பட்டாலும், நஸ்முல் இன்னும் வாரிய இயக்குநராகவே நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சர்ச்சைகளுக்குப் பின்னால் இந்தியா - வங்கதேசம் தொடர்பான பிரச்சினையும் உள்ளது. ஐபிஎல் தொடரில் முஸ்தபிசுர் ரஹ்மான் நடத்தப்பட்ட விதம் சரியில்லை எனக் கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக 2026 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியா வர வங்கதேச வாரியம் தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கதேச கிரிக்கெட்டில் புயல் சற்று ஓய்ந்தாலும், அது முழுமையாக கரையைக் கடக்கவில்லை என்றே தெரிகிறது.