மிர்புர்: ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டின் லீக் போட்டியில் அசத்திய வங்கதேச அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் வங்கதேச அணியின் பைனல் கனவு நினைவாகியது.
ஆசிய கோப்பை டி20 தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இன்றைய லீக் போட்டியில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு மன்சூர், சர்ஜில் ஜோடி துவக்கம் தந்தனர். வங்கதேசத்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாத மன்சூர் (1), சர்ஜில் (10), ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். முகமது ஹபீஸ் 2 ரன்னில் ஏமாற்றினார். அடுத்து வந்த உமர் அக்மல் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமதுவும், சோயப் மாலிக்கும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். மாலிக் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்பிராஸ் அகமது அதிரடியாக ஆடி 58 ரன்கள் குவித்தார். சொதப்பலாக ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய வங்காளதேசத்தின் தஸ்கின் அகமது 4 ஓவரில் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அல்-அமீன் ஹொசைன் 3 விக்கெட்களையும், சன்னி அராபத் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.
எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வங்கதேசத்தின் பைனல் கனவு நினைவாகியது. வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.