தாகா : வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிக மோசமான பிட்ச் தயார் செய்யப்பட்டு இருந்தது.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியை நடத்தும் வங்கதேச கிரிக்கெட் அமைப்பு இப்படி ஒரு பிட்ச்சை தயார் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், போட்டியில் நியூசிலாந்து அணி போராடி வெற்றி பெற்றது. அதன் பின் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பிட்ச் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

நியூசிலாந்து அணி வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் வங்கதேச அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்பதால் தாகாவில் நடைபெற்ற அந்தப் போட்டிக்கான பிட்ச் முற்றிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தயார் செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் வங்கதேச அணி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்து குறைந்த ஸ்கோரில் அவர்களை வீழ்த்தலாம் என திட்டமிட்டது. ஆனால், அதே விஷயம் தங்கள் பேட்ஸ்மேன்களுக்கும் நடக்கும் என்பதை அந்த அணி மறந்து விட்டது.
முதல் இன்னிங்க்ஸில் வங்கதேசம் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 46 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. வங்கதேசம் தாங்கள் போட்ட பிட்ச் திட்டம் வேலை செய்ததாக எண்ணி குஷியில் இருந்த போது, நியூசிலாந்து அணியின் ஏழாம் வரிசை வீரர் கிளென் பிலிப்ஸ் 72 பந்துகளில் 87 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணி 180 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய வங்கதேசம் 144 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இரண்டவது இன்னிங்க்ஸில், வங்கதேச அணியின் திட்டத்தை அவர்களுக்கே செயல்படுத்தியது நியூசிலாந்து அணி. அஜாஸ் படேல், மிட்செல் சான்ட்னர் என இரண்டே ஸ்பின்னர்களை 29 ஓவர்கள் பயன்படுத்தி 9 விக்கெட்களை சாய்த்தது நியூசிலாந்து அணி. மூன்றவதாக வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி ஆறு ஓவர்கள் மட்டும் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து ஆடியது. இந்த முறையும் 51 ரன்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்ந்தது. அதே கிளென் பிலிப்ஸ் 40 ரன்கள் குவித்து கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். பகுதி நேர ஸ்பின்னரான பிலிப்ஸ் முதல் இன்னிங்க்ஸில் மூன்று விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்தவுடன் பேசிய நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி தான் கிரிக்கெட்டில் இது போன்ற மோசமான பிட்ச்சை பார்த்ததே இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு எந்த வகையிலும் ஒத்துழைக்கவில்லை. 170 ஓவர்களில் போட்டி முடிந்ததே இதை காட்டுகிறது எனக் கூறினார். வங்கதேசம் விரித்த வலையில் வங்கதேச அணியே விழுந்தது. டெஸ்ட் தொடர் 1 - 1 என சமனில் முடிந்தது.