தாகா : வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2 - 0 என்ற அளவில் கைப்பற்றியது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2023 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்கள் கொண்ட அணியுடன் களமிறங்கியது.
வங்கதேச அணியும் முக்கிய வீரர்கள் காயம் அடைந்து விடக் கூடாது என்பதால் இளம் வீரர்கள் கொண்ட அணியை களமிறக்கியது. வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூட இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
இந்த தொடரின் முதல் போட்டி மழையால் தடைபட்டது. அடுத்த போட்டியில் நியூசிலாந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவது போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடரை சமன் செய்யும் நோக்கில் வங்கதேச
அணி ஆடியது.
இந்தப் போட்டியில் துவக்க வீரரும் தற்காலிக கேப்டனும் ஆன லிட்டன் தாஸ் ஆடவில்லை. அவருக்கு பதில் மற்றொரு தற்காலிக துவக்க வீரர் நஜ்முல் ஹொசைன் சான்டோ கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியின் ஆடம் மில்னே மற்றும் ட்ரென்ட் போல்ட்-இன் அதிரடி பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர். முதல் ஆறு ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட்களை இழந்து தவித்தது. அதில் இருந்து வங்கதேசம் கடைசி வரை மீளவில்லை.
கேப்டன் நஜ்முல் மட்டும் நங்கூரம் போட்டது போல நின்று ஆடினார். மில்னே 4 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், மெக்கோன்ச்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பெர்குசன், ரவீந்திரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேச அணியின் நஜ்முல் தனி ஆளாக அரைசதம் கடந்து 76 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.
வங்கதேசம் 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்த வந்த நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஃபின் ஆலன் 28 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஃபாக்ஸ்கிராப்ட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இவர்கள் இருவரையும் 10வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி மிரட்டினார் ஷோரிஃபுல் இஸ்லாம்.
ஆனால், அந்த சரிவில் இருந்து எளிதில் மீண்ட நியூசிலாந்து அணி, துவக்க வீரர் வில் யங் மற்றும் நிக்கோல்ஸ் ஆட்டத்தால் வெற்றியை நோக்கி முன்னேறியது. யங் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிளண்டல் 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியை விரைவாக வெற்றிக் கோட்டை தாண்டச் செய்தார். நிக்கோல்ஸ் 50 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுமே உலகக்கோப்பை தொடரில் இடம் பெறாத 5 - 6 வீரர்களுடன் தான் ஆடியது என்பதால் இந்த வெற்றி, தோல்விகள் அந்த அணிகளின் உலகக்கோப்பை ஆட்டத்தை பாதிக்காது.