மகளிர் டி-20... கடைசி பந்தில் வென்றது வங்கதேசம்... 7வது முறை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது!
கோலாலம்பூர்:தொடர்ந்து 6 முறையும் மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு வங்கதேசம் அதிர்ச்சி அளித்தது. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று வங்கதேசம் கோப்பையை தட்டிச் சென்றது.
7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடந்தன. இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தற்போது 7வது முறையாக இந்தியா பைனல் நுழைந்தது. பைனலில வங்கதேசத்தை சந்தித்தது. மிகவும் இந்திய மகளிர் அணி ஏழாவது முறையாகவும் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இன்று நடந்த பைனலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. துவக்கத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.

ஹர்மன் காப்பாற்றினார்
8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் என்ற நிலையில் இந்தியா தடுமாறியது. ஒரு பக்கம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன்களை குவித்தார். மறுபுறம் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. கடைசியில் 56 ரன்கள் எடுத்து ஹர்மன்பிரீத் கவுரும் ஆட்டமிழந்தார். இந்தியா 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேசம் ரன் குவிப்பு
113 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய வங்கதேசம் துவக்கத்தில் இருந்தே நிதானமாக ரன்களை குவித்து வந்தது. நிகார் சுல்தானா 27, ருமானா அகமது 23 ரன்கள் எடுத்தனர்.

பரபரப்பான ஓவர்
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீசினார். அந்த ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்போதுதான் களமிறங்கிய ஜகாரனா ஆலம் 2 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணிக்கு முதல் முறையாக ஆசியக் கோப்பையை வென்று தந்தார்.

கை நழுவியது
இந்தியத் தரப்பில் பூனம் யாதவ் 4, ஹர்மன்பிரீத் கவுர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். குறைந்த ரன்கள் எடுத்தபோதும், வங்கதேசத்தை கட்டுப்படுத்த இந்திய அணி முதலில் தவறிவிட்டது. கடைசியில் திரில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம். அதனால், தொடர்ந்து 7வது முறையும் கோப்பை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கை நழுவி போனது.


Click it and Unblock the Notifications