தாகா: 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதமாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் சேலஞ்ச் கோப்பை என்ற தொடரை நடத்தி வருகிறது. இதில் வங்கதேச மகளிர் அணி சிவப்பு மற்றும் பச்சை அணிகளாக பிரிக்கப்பட்டு, 15 வயதுக்குட்பட்ட அண்டர் - 15 சிறுவர்கள் அணியுடன் முத்தரப்பு தொடரில் விளையாடின.
ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக, மகளிர் அணிகள் இரண்டுமே 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அணியிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன. இது வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேலஞ்ச் கோப்பை தொடரின் ஒரு போட்டியில், வங்கதேச 15 வயதுக்குட்பட்ட சிறுவர் அணி, மகளிர் சிவப்பு அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சிறுவர்கள் அணி 50 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மகளிர் அணி வெறும் 94 ரன்களுக்குள் சுருண்டது. மற்றொரு போட்டியில், மகளிர் பச்சை அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறுவர் அணி மீண்டும் அதிர்ச்சி அளித்தது.
கடந்த ஐந்து மாதங்களாக வங்கதேச மகளிர் அணி எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதே அவர்களது கடைசி போட்டியாகும். அதன் பிறகு, அந்த அணியின் வீராங்கனைகள் உடற்தகுதி முகாம்களில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் தொடர்ந்து சர்வதேசத் தொடர்களில் விளையாடி தங்களைத் தயார்படுத்தி வரும் நிலையில், வங்கதேச அணியின் இந்த நிலை கவலைக்குரியதாக உள்ளது.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மகளிர் குழுத் தலைவர் நஸ்முல் அபேதின் கூறுகையில், "தகுதிச் சுற்றுக்குப் பிறகு மற்ற நாடுகளுடன் போட்டிகளை ஏற்பாடு செய்ய முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. இலங்கை அணியுடன் பேசினோம், ஆனால் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதால் பின்வாங்கிவிட்டனர். உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற எட்டு அணிகளில் நான்கு அணிகள் ஏற்கனவே போட்டிகளில் விளையாடி வருகின்றன. நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை அணுகினோம், ஆனால் அவர்கள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறாததால் ஆர்வம் காட்டவில்லை" என்று கூறினார்.
மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேசுகையில், "சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், கிடைக்கின்ற வசதிகளைக் கொண்டு கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, வங்கதேச மகளிர் அணி ஆறு நாட்கள் ஓய்வெடுத்து, பின்னர் சில்ஹெட்டில் நடைபெறும் ஒன்பது நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளது. இந்த முகாமில் மூன்று பகலிரவுப் போட்டிகளிலும் அவர்கள் விளையாடவுள்ளனர். உலகக் கோப்பைக்கு முன்பான இந்த இறுதிக்கட்ட தயாரிப்பிலாவது அவர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவார்களா என வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.