Ind vs Ban: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. சுப்மன் கில் சதம் வீண்.. இந்தியாவை ஆட்டிப்படைத்த வங்கதேசம்!
கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதிபெற்றதால், 5 வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதன்பின் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஷகில் அல் ஹசன் 80 ரன்களும், ஹிர்தாய் 54 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 266 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த திலக் வர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 17 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தொடக்க வீரர் சுப்மன் கில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் எதிர்முனையில் நின்றிருந்த கேஎல் ராகுல் 19 ரன்களிலும், தொடர்ந்து வந்த இஷான் கிஷன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனிடையே சிறப்பாக ஆடிய சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் இன்றாவது ரன்கள் சேர்ப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜடேஜா 7 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 37.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் அக்சர் படேலை எதிர்முனையில் வைத்துக் கொண்டு சுப்மன் கில் அதிரடிக்கு திரும்பினார். சிக்சரும் பவுண்டரியுமாய் விளாசிய அவர், 117 பந்துகளில் தனது 5வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் 43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்த சூழலில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்த சுப்மன் கில் 133 பந்துகளில் 121 ரன்களில் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் அக்சர் படேல் - ஷர்துல் தாக்கூர் இருவரும் இணைந்தனர். 45வது ஓவரில் அக்சர் படேல் ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, கடைசி 18 பந்துகளில் இந்திய அணி வெற்றிபெற 31 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து 48வது ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து முஷ்டாஃபிகுர் ரஹ்மான் வீசிய 49வது ஓவரின் முதல் பந்தில் ஷர்துல் தாக்கூர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 254 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அந்த ஓவரின் 4வது பந்தில் ஷமி ஒரு பவுண்டரி, 5வது பந்தில் ரன் அவுட்டானார். இறுதியாக இந்திய அணி 49.5 ஓவர்களுக்கு 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications