பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து வங்கதேச அணி களமிறங்கியுள்ளது. இலங்கை அணியில் ஹசரங்கா, மதுஷங்கா, சமீரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள். வங்கதேசம் அணியில் லிட்டன் தாஸ் இல்லாததால், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கத்ஜேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், ஆடுகளம் கொஞ்சன் உலர்வாக இருக்கிறது. இதனால் அதிக ரன்களை சேர்த்து பெரிய இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம்.
இலங்கை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் எங்களின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று மூன்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருக்கிறோம். டன்சித் ஹசன் அறிமுகம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின் இலங்கை கேப்டன் ஷனகா பேசுகையில், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். ஆனால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், டாஸை இழந்ததை நல்லதாக பார்க்கிறேன். அதேபோல் 4 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகி இருந்தாலும், அணியின் சமநிலை சரியாக இருப்பதாகவே நினைக்கிறேன். ஆடுகளத்தில் டர்ன் இருக்கும் என்று நினைக்கிறேன். பதிரானா மற்றும் வெல்லாலகே களமிறங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால், ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாகினி டான்ஸ் ரைவல்ரியும் இரு அணிகளுக்கும் இடையில் இருப்பதால், இலங்கை ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.