லாகூர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் களமிறங்கியுள்ளன. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடும் கடைசி ஆசியக் கோப்பை என்பதால், வெற்றிபெற தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். லாகூர் ஆடுகள, பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்பதோடு மட்டுமல்லாமல், தார் ரோட்டை போல் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பெரிய ஸ்கோரை விளாச முடியும். இதன் காரணமாக வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற பின் வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேசுகையில், அதிக வெப்பம் இருப்பதன் காரணமாகவே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளோம். எங்களால் நல்ல இலக்கை நிர்ணயிக்க முடிந்தால், நிச்சயமாக பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எப்படி விளையாடினோமோ, அதேபோன்ற ஆட்டத்தையே விளையாட நினைக்கிறோம். எதிரணியால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி கவலையில்லை. எங்களின் பலம், பலவீனம இரண்டுமே அறிந்து வைத்துள்ளோம். இந்தப் போட்டியில் ஷாண்டோவிற்கு பதிலாக லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பாபர் அசாம் பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விருப்பமாக இருந்தோம். ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருக்கிறது. அதனை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்த முயற்சிப்போம். வேகப்பந்துவீச்சில் சிறந்த அணியாக இருக்கிறோம். பாகிஸ்தானில் நிலவி வரும் வெப்பத்திற்கு நாங்கள் பழகிவிட்டோம்.
அதேபோல் அதிக சதங்களை விளாசிய அன்வரின் சாதனையை முறியடிக்க முயற்சிப்பேன். ஆனால் போட்டியில் வெல்வதே எங்களின் முதல் விருப்பமாக உள்ளது. நேற்றிரவு ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறிது உதவியாக இருந்தது. அதனால் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்த்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணியில் தரப்பில் கடந்த போட்டியில் சதம் விளாசிய இளம் வீரரான ஷாண்டோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அதிரடி வீரர் லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணியில் சுழற்பந்துவீச்சாளரான முகமது நவாஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஃபஹீம் அஷ்ரப் சேர்க்கப்பட்டுள்ளார்.