மும்பை: வங்கதேச கிரிக்கெட் அணி பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த சூழலில் இடமாற்றம் குறித்த எந்தத் தகவலையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெறவில்லை என அதன் செயலாளர் தேவ்ஜித் சைகியா தெரிவித்துள்ளார். இது வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ICC) இடையேயான ஒரு விவாதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 7 அன்று தொடங்கும் இந்த உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் நடத்துகின்றன.இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நிலவும் பாதுகாப்பு பதட்டங்களைக் காரணம் காட்டி, வங்கதேச கிரிக்கெட் வாரியம், தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரி ஐசிசி-க்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த விவகாரத்தைப் பரிசீலிப்பதாக ஐசிசி தங்களுக்கு உறுதியளித்ததாகவும் வங்கதேச வாரியம் கூறியிருந்தது.

முதலில் கொல்கத்தா மற்றும் மும்பையில் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளுக்குப் பதிலாக, சென்னை மற்றும் திருவனந்தபுரம் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. வங்கதேசம் விரும்பிய இலங்கையில் விளையாட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது. ஆனாலும், இந்த இடமாற்றம் குறித்து எந்தத் தகவலும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வரவில்லை என சைகியா மீண்டும் வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய தேவ்ஜித் சைகியா, "வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது பிற எங்கேயும் மாற்றுவது குறித்த எந்தத் தகவலையும் பிசிசிஐ பெறவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தொடர்பாகும். ஏனெனில் ஐசிசிதான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐசிசி எங்களுக்குத் தெரிவித்தால், பிசிசிஐ, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது, எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
தற்போதைய கால அட்டவணைப்படி, வங்கதேசம் மூன்று போட்டிகளில் கொல்கத்தாவில் விளையாட உள்ளது. அவை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக (பிப்ரவரி 7), இத்தாலிக்கு எதிராக (பிப்ரவரி 9) மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக (பிப்ரவரி 14). அதன் பிறகு, பிப்ரவரி 17 அன்று நேபாளத்தை எதிர்கொள்ள அணி மும்பைக்குச் செல்லும்.