டாக்கா: கிரிக்கெட் விளையாட வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணிக்கு மூங்கில் கம்புதான் கிடைக்கும் என்பது போல கிண்டலடித்து விளம்பரம் போட்டுள்ளது குளிர்பான நிறுவனம் ஒன்று.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வெளியிடப்பட்ட 'மோகா மோகா' விளம்பரம் போல, தற்போது வங்கதேச - இந்திய தொடரின் போது வங்கதேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனம் இந்திய ரசிகர்களை கடுப்பேற்றும்விதத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பூங்காவில் அமர்ந்து ஒருவர் பானிபூரி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த இந்தியர், எதிரே இருப்பவரை பார்த்து நீங்கள் பாகிஸ்தானியரா? என்று கேட்கிறார். இருவருக்கும் இடையே சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நீடிக்கிறது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகிஸ்தானியர் கீழே கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து இந்தியருக்கு காட்டுகிறார். தொடர்ந்து வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் கட்டையை காட்டுவது போல் அந்த விளம்பரம் முடிகிறது.
இந்தியர்களுக்கு வெற்றி கிடைக்காது மூங்கில் கட்டைதான் கிடைக்கும் என்று அந்த விளம்பரம் முடிகிறது. இந்தியா அணி தற்போது வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது இந்த விளம்பரம் அங்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இந்திய அணியிடம் வங்கதேசம் தோல்வியடைந்தது. அந்த கடுப்பை இப்படி வெளிப்படுத்தி காசு பார்க்க நினைக்கிறது குளிர்பான நிறுவனம் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.