“சோசியல் மீடியாவில் மட்டுமே நீ சிறந்த வீரன்”.. பாகிஸ்தான் கிங் பாபர் அசாமை வறுத்தெடுத்த பாசித் அலி
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை முன்னாள் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணி கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் போதெல்லாம் பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் கிங் என பாபர் அசாமுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் விளாசி இருக்கிறார் பாசித் அலி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு விளையாடிய பாபர் அசாம் 8 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2026 ஆம் ஆண்டில் 8 டெஸ்டில் விளையாடி இருக்கும் பாபர் அசாம், அவற்றில் 322 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக அவரால் ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்க முடியவில்லை.

இது குறித்து பாசித் அலி பேசுகையில், "கடினமான சூழ்நிலைகளில் அணிக்கு உதவாத போது நீங்கள் எப்படி சிறந்த வீரராக முடியும்? உங்களது ரசிகர்கள் மற்றும் மக்கள் தொடர்பு குழுவினருக்கு (PR) முன்னிலையிலும், சமூக வலைதளங்களிலும் மட்டுமே நீங்கள் சிறந்த வீரராக வலம் வர முடியும். உங்களது ரசிகர் பட்டாளம் வேண்டுமானால் உங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர் என கூறலாம், ஆனால் பாகிஸ்தானின் மிகச்சிறந்த வீரர்கள் பட்டியலில் உங்களால் இடம் பெற முடியாது" என்று விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், "பாகிஸ்தான் அணியின் பேட்டிங் உங்களை நம்பியிருக்கும் போது, தயவுசெய்து இதுபோன்ற மோசமான ஷாட்களை ஆடி ஆட்டமிழக்காதீர்கள்" என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக மட்டுமே பாபர் அசாம் ரன் குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக அவரது பேட்டிங் செயல்பாடு சராசரியாகவே உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்விகளை அடைந்து வரும் நிலையில் பாபர் அசாமுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
