அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2025-26 பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஆடும் அவர், மீண்டும் ஒருமுறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிட்னி அணி தோல்வியைத் தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு, 3-வது வீரராகக் களமிறங்கினார் பாபர் அசாம். பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டெஸ்ட் மேட்ச் ஆடுவது போல் ஆடினார். 10 பந்துகளைச் சந்தித்த பாபர், ஒரே ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர் லூக் வுட் பந்துவீச்சில் பாபர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பாபர் அசாமின் இந்த மந்தமான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், ட்விட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

"இப்படி 90 ஸ்ட்ரைக் ரேட்ல ஆடறதுக்கு இவரை எதுக்கு சிட்னி அணி ஒப்பந்தம் செய்தது?", "எங்க ஊரு கல்லி கிரிக்கெட்ல கூட இவரை ஏலத்தில் எடுக்க மாட்டாங்க.. ஆனா பிபிஎல்-ல இவருக்கு எப்படி சான்ஸ் கிடைச்சுது?", "உலகக்கோப்பையில் அமெரிக்கா, நெதர்லாந்து கூட ஆடும்போது தான் இவர் அடிப்பார் போல.." என்று மீம்ஸ் போட்டுத் தாக்கி வருகின்றனர்.
சிட்னி அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப் 46 ரன்கள் எடுத்தார். இலக்கை விரட்டிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், ஜேமி ஓவர்டன் எடுத்த 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட் மற்றும் லியம் ஸ்காட் விளாசிய 51 ரன்கள் ஆகியவற்றின் உதவியுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாபர் அசாம் 2025-26 பிக் பாஷ் லீக் தொடரின் முதல் போட்டியிலும் மோசமாக ஆட்டமிழந்து விமர்சனத்தை சந்தித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது வெளியே அமர வைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.