டாக்கா: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம், மீண்டும் எந்த முகாந்திரமும் இன்றி இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று அதே கதையை கூறி இருக்கிறார். மேலும், ஐசிசியிடம் இருந்து ஒரு அதிசய முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கோரிக்கையை ஐசிசி நிராகரித்த பிறகும், எப்படியாவது மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி தங்கள் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்கேற்காவிட்டால் தொடரிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஐசிசியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகும், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் தனது பிடிவாதத்தைக் கைவிடவில்லை. இது குறித்து அவர் பேசுகையில், "ஐசிசியிடம் இருந்து ஒரு அற்புதம் நிகழும் என்று நான் நம்புகிறேன். உலகக்கோப்பையில் விளையாட யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஐசிசி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. வாக்கெடுப்புக்கு முன்பே எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கிவிட்டோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா தங்களுக்குப் பாதுகாப்பான நாடு இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். "வங்கதேச வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாட விரும்புகிறார்கள். எங்கள் அரசாங்கமும் நாங்கள் விளையாடுவதை விரும்புகிறது. ஆனால் இந்தியா எங்கள் வீரர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை" என்று அமினுல் இஸ்லாம் குறிப்பிட்டார்.
முன்னதாக, குரூப் பி பிரிவில் உள்ள அயர்லாந்து அல்லது ஜிம்பாப்வே அணியுடன் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்ள வங்கதேசம் விருப்பம் தெரிவித்தது. அப்படிச் செய்தால் வங்கதேசத்தால் இலங்கையில் விளையாட முடியும். இது குறித்துப் பேசிய அமினுல், "நாங்கள் அயர்லாந்து அல்லது ஜிம்பாப்வே அணியுடன் இடத்தை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தோம். அதுதான் எளிய வழியாக இருந்திருக்கும். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம், தங்கள் பிரிவில் ஒரு புதிய அணியைச் சேர்க்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டது" என்ற தகவலை வெளியிட்டார்.
ஐசிசி தற்போது வங்கதேசத்திற்கு 24 முதல் 48 மணி நேரம் வரை இறுதி அவகாசம் அளித்துள்ளது. இது குறித்து அமினுல் கூறுகையில், "வாக்கெடுப்புக்குப் பிறகு, எங்கள் அரசிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அவகாசம் அளித்துள்ளனர். நான் அரசின் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்தியா பாதுகாப்பானது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், அரசுடன் மீண்டும் ஒருமுறை பேசிவிட்டு, அவர்களின் முடிவை ஐசிசியிடம் அறிவிப்பேன்" என்று தெரிவித்தார்.
வங்கதேச அணி விளையாட மறுத்தால், அந்த இடத்தில் ஸ்காட்லாந்து அணியைச் சேர்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.