மும்பை : இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர், அதன்பிறகு ஆர்.சி.பி உள்ளிட்ட அணையில் பயிற்சியாளராக இருந்தார். தற்போது இந்திய கிரிக்கெட் தொடர்பாக அவ்வப்போது கருத்துக்களையும் தெரிவித்து வருவதையே முழு வேலையாக தற்போது மாற்றிக் கொண்டார்.

ரோகித் சர்மா, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அடுத்த கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்காதது எனக்கு ஆச்சரியத்தை தான் கொடுக்கின்றது.
ஏனென்றால் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிறகு ரோகித் சர்மா, டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அப்போது எல்லாம் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தினார். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடையவில்லை என்றால் தற்போது அவர்தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பார்.
ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்ற பாதையில் இந்திய அணி பயணித்துக் கொண்டிருந்தது. தேர்வுக்குழுவினரும் இதை தான் செய்தார்கள். திடீரென்று அவர்கள் ஏன் யு டர்ன் போட்டு சிக்கிக் கொள்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தேர்வு குழு தலைவர் மற்றும் பயிற்சியாளர் ஹர்திக்கிடம் பேசியதாக நான் கேள்விப்பட்டேன்.அதற்காக நான் சூரியகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது தவறான முடிவு என்று கூறவில்லை.
சூரிய குமார் கேப்டனாக நல்ல பணியை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தான் நான் நினைக்கின்றேன். அதிக அளவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.இதனால் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. மும்பை அணியின் உள்நாட்டு போட்டிகளிலும் கேப்டனாக பணிபுரிந்து இருக்கிறார். இதனால் வீரர்களிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும் என்று சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.