மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணையாக இருக்கப் போகும் பயிற்சியாளர் குழு யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை.
தமக்கு தேவையான பயிற்சியாளர்களை தாமே நியமித்துக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார். அதன்படி தமக்கு யார் வேண்டுமென்று ஒரு விருப்ப பட்டியலையும் கம்பீர் வழங்கினார். இதில் பந்துவீச்சு பயிற்சியாளராக வினை குமார் வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்ததை பிசிசிஐ ஏற்கவில்லை.

வினய் குமாருக்கே ஒரு பயிற்சியாளர் தேவைப்படும் நிலையில் வினய் குமார் பயிற்சியாளராக கொண்டு வருவது தேவையற்றது என்று பலரும் கிண்டல் அடித்து வந்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சு பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரருமான மார்னே மார்க்கல் பயிற்சியாளராக சேர்க்க வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பயிற்சியாளர்களை பிசிசிஐ சேர்க்கவில்லை. இதனால் இது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ நேரம் தாழ்த்தியது. இந்த நிலையில் கம்பீர் கேட்டுக்கொண்டதுபடியே மார்னே மார்க்கல்லை பயிற்சியாளராக சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்து விட்டது. தென்னாபிரிக்க அணிக்காக 86 சர்வதேச டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் மார்க்கல் விளையாடி இருக்கிறார்.
39 வயதான அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில் கம்பிருடன் கே கே ஆர் அணியில் ஒன்றாக மார்க்கம் விளையாடிய நிலையில் தற்போது அவர் பயிற்சியாளராக வர பிசிசிஐ ஒப்புக்கொண்டு விட்டது. எனினும் இலங்கைத் தொடரில் அவர் பயிற்சியாளராக வரப்போவதில்லை
அதற்கு பதில் சாய்ராஜ் என்ற சுழற் பந்துவீச்சாளரை சேர்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. சாய் ராஜ் இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் எட்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிந்து வருகிறார். இதனால் மார்னே மார்க்கல் வரும் வரை சாய் ராஜ் அந்த பணியில் ஈடுபட போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.