மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் இருக்கிறது. இதனை சரி செய்வதற்காக பிசிசிஐ தற்போது விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
பிசிசிஐயின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்திய அணி இளம் வீரர்களுக்கு ஷாட்பாலை எதிர்கொள்ள பிரச்சனை இருக்கிறது.

வேகப்பந்துவீச்சாளர் ஷாட்பால் வீசினாலே அதனை அடித்து கேட்ச் ஆகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய வீரர்கள் வந்தாலே அவர்களை கட்டுப்படுத்த இப்படி ஒரு ஆயுதத்தை வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இதனை சரி செய்ய வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அதிக அளவு ஷாட் பாலை எதிர் கொள்ள வேண்டும்.
இதன் காரணமாக நடப்பாண்டு முதல் சையது அலி முஸ்தாக் டி20 தொடரில் ஒரு ஓவருக்கு இரண்டு ஷாட் பாலை வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ஷாட்பாலை எதிர்கொண்டு பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சையது முஸ்தாக் அலி தொடரில் பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான நிலையை இந்த ஷாட் பால் உருவாக்கும். பேட்ஸ்மேன் நன்றாக அடித்துக் கொண்டு இருந்தால் இனி பவுலர்கள் இரண்டு ஷாட் பாலை வீசி அவர்களை கட்டுப்படுத்தலாம்.

இதற்கு முன்பாக ஒரு ஓவருக்கு ஒரு ஷாட்பால் தான் வீச வேண்டும் என்ற நிலை இருந்தது. இதேபோன்று சையது அலி முஸ்தாக் தொடரை அக்டோபர் 16ஆம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு விஜய் ஹசாரே கோப்பையை பிசிசிஐ நடத்தும். இதேபோன்று இந்தக் கூட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
மேலும் வரும் உலகக் கோப்பை தொடருக்கு மைதானங்களை புனரமைக்க இந்த கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக இரண்டு மைதானங்களில் நிலையை மாற்றவும் உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு அனைத்து மைதானங்களையும் நவீனப்படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்கவும் சில விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளது.