மும்பை: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் செய்த சர்ச்சைக்குரிய சைகைகளுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), மத்திய பாஜக அரசுமே பொறுப்பு என்று சிவசேனா (UBT) கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாகச் சாடியுள்ளார். இந்தச் தொடர் நடக்க காரணமாக இருக்கும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா-வை அவர் குறிப்பாகத் தாக்கி பேசியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் போட்டியில், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது அரைசதத்தை பேட்டை ஒரு AK-47 துப்பாக்கி போலப் பாவித்து சுடுவது போலக் கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல, ஹாரிஸ் ரவுஃப், 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின் போது ஆறு இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற தகவலைக் குறிப்பிடும் வகையில், '6-0' என்று சைகை காட்டியதும் பெரும் கண்டனங்களைப் பெற்றது.

இந்தச் செயல்களுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் உட்பட பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் நேரடியாகக் களமிறங்கியுள்ளனர்.
சிவசேனா (UBT) கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான சஞ்சய் ராவத், பிசிசிஐ-ஐயும் மத்திய அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில், "பாகிஸ்தான் தீவிரவாதிகள் எப்படி அப்பாவி மக்களைப் படுகொலை செய்தார்கள் என்பதை சாஹிப்சாதா ஃபர்ஹான் களத்திலேயே நிரூபித்துவிட்டார். அரைசதம் அடித்ததும், பேட்டை ஒரு AK-47 போலப் பிடித்து சுட்டிருக்கிறார்! இது பிசிசிஐ மற்றும் மோடி அரசின் தோல்வி. இந்தியாவின் இந்த அவமானத்திற்கு வழிவகுத்த ஜெய் ஷாவுக்கு பாரத ரத்னா விருதுதான் கொடுக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், "இந்தியாவுக்கு எதிராக, ஒட்டுமொத்த உலகின் முன்னால் பாகிஸ்தான் வீரர் நம்மை ஏளனம் செய்கிறார். இந்திய விமானத்தைச் சுட்டு வீழ்த்துவது போல சைகை காட்டுகிறார். அப்போதே நாம் ஏன் போட்டியிலிருந்து வெளியேறவில்லை? பாகிஸ்தானுக்கு ஏன் இவ்வளவு பெரிய மேடையை வழங்க வேண்டும்? பாஜக மத்திய அரசுக்கு சாபம். பாகிஸ்தானுடன் போட்டிகளில் விளையாடி, அவர்களுடன் எல்லாம் சரியாகிவிட்டது என்று உலகிற்குச் சொல்லப் பார்க்கிறார்கள்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள் செய்த சர்ச்சையான சைகைகள் விவகாரத்தில் இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.