மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அணி வீரர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது.
டெஸ்ட் போட்டி 10 முதல் 14ந்தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் 18ம் தேதி, 21ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் நடக்கிறது.
வங்காளதேச தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை நடக்கிறது. சந்தீப் பட்டேல் தலைமையிலான தேர்வு குழு மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது.

கேப்டன் டோணி, விராட் கோஹ்லி போன்ற மூத்த வீரர்கள், உலக கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடியுள்ளதால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர்கள் ஷேவாக், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், யுவராஜ்சிங் ஆகிய 4 பேரும் வங்காளதேச தொடருக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் இந்த தொடரில் விளையாட வைக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
2011 உலககோப்பையில் ஜொலித்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர். அவர்களது கடைசி சர்வதேச தொடராக வங்காளதேச பயணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.