மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தொடர்ந்து இந்திய அணி 2வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்திய அணி நிர்வாகத்தையும் , சீனியர் வீரர்களையும் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் பொளந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தோல்வியை மறக்கடிக்க, பிசிசிஐ ஒரு விசேஷ ஏற்பாட்டை செய்துள்ளது. பொதுவாக, ஒருவர் தன்னை ரவுடி என்று கட்டி கொள்ள, ஆள் அதிகாரம் பலம் இல்லாத புள்ள பூச்சிகளை போட்டு அடித்து தங்களை வீரர்கள் என்று காட்டி கொள்வார்கள்.

தற்போது இந்திய அணியும், அப்படி ஒரு செயலை தான் செய்ய உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் வாழ்ந்த கெட்ட அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது எந்த ஒரு நட்சத்திர வீரர்களும் இல்லை. இதனால், தற்போது, அங்கு ஒரு நெடுந்தொடரை நடத்தினால், இந்திய அணி வீரர்கள் இழந்த பெருமையை மீட்பார்கள்.
அதற்காக தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு வரும் ஜூலை 12ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது.
வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், ஜூலை 20ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
முதல் ஒருநாள் போட்டி ஜூலை 27ஆம் தேதியிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 29ஆம் தேதியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகள் இந்திய நேரப்படி இரவு ஏழு மணிக்கு தொடங்க இருக்கிறது.
இதன் பிறகு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதியும் இரண்டாவது டி20 ஆகஸ்ட் 6ஆம் தேதி போட்டியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி யும் நடைபெறுகிறது.அதன் பிறகு கடைசி 2 டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த 3 தொடர்களிலும், அதிகளவு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஜெய்ஷ்வால், ருதுராஜ் ஆகியோருக்கு டெஸ்ட் போட்டியிலும், ரிங்கு சிங் போன்றோர்க்கு டி20 போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் தான் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.