மும்பை : T20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகையை வழங்கி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இது ஐசிசி ஒட்டு மொத்த அணிகளுக்கும் வழங்கிய பரிசு தொகையை விட அதிகமாகும். இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முறை கூட டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. அது மட்டும் அல்லாமல் 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு ஒரு முறை கூட இந்திய அணி ஐசிசி தொடரையும் வெல்லவில்லை.

இந்த நிலையில் இந்தியா பலமுறை இறுதி போட்டி, அரை இறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் எப்போது தான் மீண்டும் அந்த உலகக் கோப்பையை இந்தியா வென்றது என்ற செய்தியை கேட்போம் என ஏக்கத்தில் இருந்தார்கள். தோனிக்கு பிறகு வேறு எந்த கேப்டனும் இந்த உலகக் கோப்பையை வாங்கித் தர மாட்டாரா என்று சோகத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி t20 உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறது. இதனால் பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இந்திய அணியை பாராட்டிய அவர் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய திறன் உத்வேகம் வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டியுள்ள ஜெய்ஷா, இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்கள் மற்றும் இதர நிபுணர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷாவின் இந்த பரிசுத்தொகை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. டி20 உலக கோப்பை நடத்தும் ஐசிசியே இந்த தொடருக்கு பரிசுத்தொகை என 91 கோடி ரூபாயை தான் அறிவித்து இருக்கிறது. ஆனால் அதைவிட பல மடங்கு அதிக தொகையை இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது பிசிசிஐ 3 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியது.
அது அப்போது உள்ள இந்திய ரூபாய் மதிப்பில் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை இருந்திருக்கும். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அப்போதைய பிசிசிஐ தலைமை, ஒரு வீரருக்கு தலா ஒரு கோடி என முதலில் அறிவித்து அதன் பிறகு இரண்டு கோடி என உயர்த்தியது. பயிற்சியாளர்களுக்கு தனியாக 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.