எல்லா பிரச்சனையும் ஓவர் ஓவர்... இந்திய மகளிர் டீம் ஹேப்பி - ஈகோ போயே போச்சு
டெல்லி: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக மும்பைக்கு அழைத்துச் செல்ல, இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு என தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை கேப்டன் மிதாலி ராஜ் உறுதி செய்திருக்கிறார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
அதேசமயம், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

கடும் நடவடிக்கை
இதற்காக இந்திய அணி வீரர்கள், இன்று (மே.19) புதன்கிழமை முதல், மும்பையில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதேபோல், மகளிர் அணியும் இன்று முதல் பயோ - பபுளில் இணைகிறது. இதற்கான பிராசஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வீரர்கள் வேறு எந்த இடத்திற்கும் செல்ல முடியாத வகையில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் எவரையும் வீரர்கள் பார்க்க அனுமதி கிடையாது.

கமர்ஷியல் விமானம்
இந்த நிலையில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும், இந்திய ஆண்கள் அணி வீரர்களை அழைக்க, பிசிசிஐ சார்ட்டர் விமானங்களை அனுப்பியுள்ளது. ஆனால், பெண்கள் அணியை அழைத்து வர கமர்ஷியல் விமானமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி, இதுகுறித்து சில வீராங்கனைகள் வெளிப்படையாகவே எதிர்ப்புகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஏன், பிசிசிஐ இப்படி ஒரு பாகுபாடு காட்டுகிறது? என்று சில வீராங்கனைகள் கேள்வி எழுப்பியதாக கூறப்பட்டது.

சார்ட்டர் ஃபிளைட்
இந்நிலையில், அனைத்து சிக்கலுக்கும் முடிவு கட்டும் வகையில், இந்திய வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர். அதில், "ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளையும் மும்பைக்கு அழைத்துச் செல்ல பிசிசிஐ சார்ட்டர் விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. தூரத்தையும் தனிப்பட்ட வசதிகளையும் கருத்தில் கொண்டு வீராங்கனைகள் தங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்" என்று கவுர் பதிவிட்டுள்ளார்.

முற்றுப்புள்ளி
அதேபோல் கேப்டன் மிதாலி ராஜ் தனது டீவீட்டில், "மும்பைக்கு செல்லவும் இங்கிலாந்து செல்லவும் பிசிசிஐ சார்ட்டர் விமானம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல், வீராங்கனைகளுக்கு வீடுகளிலேயே வழக்கமான RT-PCR சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications