தீவிரவாத தாக்குதல் நடக்காதுன்னு பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்குமா -பிசிசிஐ காட்டம்
டெல்லி : 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் பங்கேற்கும்வகையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா உள்ளிட்டவை ஒழுங்காக அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டிருந்தது.
Recommended Video
இந்நிலையில், தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறாது என்பதற்கு பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்குமா என்று பிசிசிஐ கேள்வி எழுப்பியுள்ளது.
பிசிசிஐயிடம் இருந்து விசா குறித்த எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை கேட்பதற்கு முன்பாக, எல்லையில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்கு பிசிபி எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை தருமா என்று பிசிசிஐ அதிகாரி கேட்டுள்ளார்.

பிசிபி கேள்வி
இந்தியாவில் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்தியாவில் இந்த உலக கோப்பை தொடர்களின் திட்டத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து ஐசிசி விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கேட்ட பிசிபி
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்கும்வகையில், விசா உள்ளிட்டவற்றில் எந்த தேக்கமும் ஏற்படாது என்பதற்கு ஐசிசி, பிசிசிஐயிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பெற்றுத்தர வேண்டும் என்று பிசிபி சிஇஓ வாசிம் கான் கேட்டிருந்தார். மேலும் இது ஐசிசி நிகழ்வு என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நடைபெறாததற்கு உத்தரவாதம்
இந்நிலையில் விசா நடவடிக்கைகளில் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை கேட்பதற்கு முன்பு, இந்திய எல்லையில் புல்வாமா உள்ளிட்ட தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கு பிசிபி எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்குமா என்று பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய எல்லையில் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் நடைபெறும் தீவிரவாத ஊடுருவல்கள் தடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நடுநிலையான செயல்பாடு
மேலும் இந்தியா அழகான நாடு என்றும், மிகவும் நடுநிலையாக செயல்படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கு விசா வழங்குவதில் எந்தவித பேதமும் இருக்கக்கூடாது என்று இந்திய அரசு கடந்த 2019 ஜூன் மாதத்தில் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications