மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிசிசிஐ விருதுகள் விழாவில் இரண்டு முக்கிய விருதுகளை வென்று அசத்தி இருக்கிறார்.
பிசிசிஐ விருதுகள் கடந்த நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நான்கு இந்திய வீரர்களுக்கு பாலி உம்ரிகர் சிறந்த வீரருக்கான விருது கடந்த
2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்துக்கு வழங்கப்பட்டது.

2019 - 20 காலகட்டத்துக்கான சிறந்த சர்வதேச வீரர் விருதை முகமது ஷமி தட்டிச் சென்றார். அடுத்து 2020 - 21 காலகட்டத்துக்கான சிறந்த சர்வதேச வீரர் விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. 2021 - 22 காலகட்டத்துக்கான சிறந்த சர்வதேச வீரர் விருதை பும்ரா வென்றார். 2022 - 23 காலகட்டத்துக்கான சிறந்த சர்வதேச வீரர் விருதை சுப்மன் கில் பெற்றார்.
சிறந்த அறிமுக வீரர் விருதை மயங்க் அகர்வால் (2019 - 20), அக்சர் பட்டேல் (2020 - 21), ஸ்ரேயாஸ் ஐயர் (2021 - 22), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (2022 - 23) ஆகியோர் வென்றனர். அவர்களது டெஸ்ட் அறிமுகத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இதைத் தவிர இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது. அதிக விக்கெட் வீழ்த்திய அஸ்வின் மற்றும் அதிக ரன் குவித்து இருந்த ஜெய்ஸ்வால் திலிப் சர்தேசாய் விருதுகளை வென்றனர். அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் என இருவருமே தலா இரண்டு விருதுகளை வென்றனர்.
மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த வீராங்கனைக்கான நான்கு ஆண்டுகளுக்கான விருதை இருவர் மட்டுமே வென்றனர். ஆல் - ரவுண்டர் தீப்தி சர்மா 2019 - 20 மற்றும் 2022 - 23 காலகட்டத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுகளை வென்றார். ஸ்மிருதி மந்தனா 2020 - 21 மற்றும் 2௦21 - 22க்கான விருதுகளை வென்றார். சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஃபரூக் இன்ஜினியர் மற்றும் ரவி சாஸ்திரி வென்றனர்.