செய்றது நானு, நல்ல பேரு உனக்கா? சக தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது அகர்கர், கம்பீர் கோபம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுத் குழு உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் தேர்வுத் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
அகர்கரைத் தவிர, இந்தத் தேர்வுத் குழுவில் பிரக்யான் ஓஜா, ஆர்.பி. சிங், சிவ் சுந்தர் தாஸ் மற்றும் அஜய் ரத்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த தேர்வுக்குழுவில் உள்ள இருவர், தங்களது நியமனங்கள் காரணமாகவே அணியின் தேர்வு முறை மேம்பட்டுள்ளது என்று பிசிசிஐ உயர் அதிகாரிகளை நம்ப வைக்க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இவர்களின் இந்தச் செயல்பாடு கம்பீர் மற்றும் அகர்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் கில் நீக்கப்பட்டு, இசான் கிஷன் சேர்க்கப்பட்டதற்கு காரணமே தாங்கள் தான் என்பது போல் அந்த 2 உறுப்பினர்கள் பிஆர் பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும், டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே, இந்தியா தனது கடைசி ஏழு டி20 போட்டிகளில் ஆறில் தோல்வியடைந்து பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தோல்விகளுக்கான பொறுப்பிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், அதிலிருந்து விலகி நிற்கவும் அந்த இரு தேர்வாளர்களும் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சனை நீக்குவது என்ற முடிவில், அகர்கரும் தேர்வுத் குழுவின் பிற உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் சுற்றுப்பயணம் ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
சமீபத்தில், இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், அணியை வழிநடத்துவது குறித்து கம்பீர் மற்றும் அகர்கர் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். "தலைமைத் தேர்வாளருக்கும் தலைமைப் பயிற்சியாளருக்கும் இடையே லேசான கருத்து வேறுபாடு இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
அகர்கர் நீண்ட காலத் திட்டங்களைக் கொண்டுள்ளார் என்றும், தற்போதைய பயிற்சியாளரோ 'விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்' என்று விரும்புவதாகவும் நான் கருதுகிறேன். இதனால்தான் நமக்கு முன்னால் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. இது வீரர்களுக்குச் சிறந்த சூழலா என்றால், நிச்சயமாக இல்லை" என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்று, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications

