மும்பை : இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது . இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
எனினும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் பல சர்ச்சைகள் இருந்துள்ளது. ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியகுமார் யாதவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்திற்கும் மேலாக சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ்க்கு ஏற்பாடுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதைப் போன்று கடைசியாக இந்தியா விளையாடிய ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சனும் ஜிம்பாப்வே தொடரில் 47 பந்துகளில் சதம் அடித்த அபிஷேக்சர்மாவும் இந்திய இலங்கைத் தொடரில் சேர்க்கப்படவில்லை.
இதனால் பல்வேறு தரப்பினரும் பிசிசிஐ நோக்கி கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய அணி எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்து ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்க பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகார்கர் முடிவு எடுத்துள்ளார். இதற்காக இந்திய அணி புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்திக்க அஜித் அகாகர் திட்டமிட்டுள்ளார். அதில் ருதுராஜ் ஏன் இலங்கைத் தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து அஜித் அகார்கர் விளக்கமளிக்க போகிறார்.
இதைப் போன்று கில் ஏன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். சாம்சன் ஏன் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. அபிஷேக் ஷர்மா ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறித்தும் அஜித் அகார்கர் விளக்கம் அளிக்கப் போகிறார். இதேபோன்று சூரியகுமார் யாதவ் டி20 கேப்டனாக எத்தனை நாளைக்கு தொடர்வார் என்பது குறித்தும் அஜித் அகார்கர் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கப் போகிறார்.சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் தேர்வு குறித்து கிழித்து தொங்க விட்டு வரும் நிலையில், அஜித் அகார்கர் ரசிகர்களின் கோபத்தை குறைக்கும் வகையில் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.