ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் டி20 கேப்டன் பொறுப்பு.. ஒற்றை காலில் நிற்கும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர்
மும்பை: அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, ஸ்ரேயாஸ் ஐயரை நீண்டகால டி20 கேப்டனாக நியமிக்க கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை.
பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், ஸ்ரேயாஸ் ஐயரை இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக நீண்டகாலமாகவே மனதில் வைத்துள்ளார். சூர்யகுமார் யாதவை நீக்கும் முடிவில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் அகர்கருடன் ஒத்துப் போவார் என பிசிசிஐ நம்புகிறது.

சூர்யகுமார் தனது பேட்டிங் ஃபார்ம் மற்றும் மணிக்கட்டு காயம் காரணமாக அழுத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும், மும்பை இந்தியன்ஸ் வீரரான அவர் தனக்கு எந்தக் காயமும் இல்லை என மறுத்ததோடு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அகர்கர் ஒரு நெடுங்கால திட்டத்தை வைத்துள்ளார். இத்திட்டத்தின் மையமாக ஸ்ரேயாஸ் உள்ளார் என தெகவல்கள் சுட்டிக்காட்டுகிறது. புதிய நான்காம் நிலை பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயரைக் கருதுவதால், அவர் இந்திய பிளேயிங் லெவனில் சூர்யகுமாரை மாற்றக்கூடும்.
இதே போன்று அணியின் சில அம்சங்களில், குறிப்பாக டெஸ்ட் அணியில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களில் அகர்கருக்கும் கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்கால திட்டத்திற்காக அவர் கடினமான முடிவுகளை எடுத்துள்ளார். ஸ்ரேயாஸ் ஒருநாள் துணை கேப்டனாகவும், டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய கடைசி இருதரப்புத் தொடரில் அணியிலும் இருந்ததற்கு இதுவே காரணம்
"இப்போதுள்ள கேள்வி, பயிற்சியாளரின் விருப்பம் ஸ்ரேயாஸ் தானா? அல்லது வேறு யாரையாவது அகர்கர் மனதில் வைத்துள்ளாரா? அத்தேர்வு, தேர்வுக் குழுவின் விருப்பமாக அமையுமா? இவை முக்கியமான விவாதப் புள்ளிகளாக மாறியுள்ளது என பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கின்றன.
டி20 கேப்டன் பதவிக்கான பரிசீலனையில் ஷுப்மன் கில், அக்ஸர் படேல், இஷான் கிஷன், திலக் வர்மா போன்றோரின் பெயர்களும் உள்ளன. அதே சமயம், சஞ்சு சாம்சனுக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற வீரர்களைக் காட்டிலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பெரிய பலம் உண்டு. அவர் ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்றதுடன், ஒரு இறுதிப் போட்டிக்கும் அணியை வழிநடத்தியுள்ளார். லீக்கின் மிக அனுபவம் வாய்ந்த ஆக்டிவ் கேப்டன்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நடப்பு சீசனில் பஞ்சாப் அணி 5வது இடத்தையே பிடித்து, பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.


Click it and Unblock the Notifications

