மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்னவாக இருக்கும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறியுள்ள நிலையில், ராகுல் டிராவிட் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட பிசிசிஐயின் ஆலோசனை குழுவில் சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் இடம்பெற்ற நிலையில், அவர்களின் சம கால ஜாம்பவான் வீரரான ராகுல் டிராவிட் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.
4 பேரும் ஒரே குழுவில் இருந்தால் யார் பெரியவர் என்ற ஈகோ பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்பதற்காக டிராவிட்டே முன்வந்து பதவியை மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர், டிராவிட் போன்ற மதிப்புமிக்க வீரரை இழக்க நாங்கள் விரும்பவில்லை. அவருக்கு என்ன பொறுப்பு தரப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு, இதுபோன்ற முக்கியமான வீரர்களின் ஆலோசனைகள் அவசியம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே டிராவிட் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி கோச்சாக நியமிக்கபட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.